ஆந்திராவில், ஆளும் கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அவரது மகன் மற்றும் கட்சி முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதை அடுத்து பல இடங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது முதல் தற்போது வரை, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை அடுத்து ஆளும் கட்சியை கண்டிக்கும் வகையில் அந்த கட்சியினர் கர்னுல் மாவட்டத்தில் உள்ள அதம்கூர் நகரில், பேரணி நடத்த தொடங்கினர். ஆனால், இந்த பேரணிக்கு, தெலுங்கு தேசம் அனுமதி வாங்கவில்லை என மாநில அரசு கூறியது.

இன்று (செப்.,11) பேரணிக்கு தடை விதித்த போலீசார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் மற்றும் கட்சி முக்கியத் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தனர். சந்திரபாபு வீட்டிற்கு செல்ல முயன்ற தொண்டர்களையும் கைது செய்தனர். மேலும் நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டு காவலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து, சந்திரபாபு, இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.